தமிழ்த் தெய்வம்

19/8/11

சிறுகதை

                                               குதிரை
         ' டேய் எழில், எழுந்திரு'  என்று அதட்டலுடன் எழுப்பினார் என் அப்பா.திடீரென விழித்தெழுந்த எனக்குப் பயம் உடலெங்கும் பரவியது.காரணம் அப்போது எனக்கு ஏழு அல்லது எட்டு வயதுதான் இருக்கும்.இருள் கவ்விய இருட்டு நேரம்.அந்த காலங்களில் பெரும்பாலும் கிராமங்களிலெல்லாம் கதிரவன் தன் கதிர்களை உள்ளிழுத்துக்கொண்டதும் ,கிராமவாசிகள் தங்களின் மாலைக் கடன்களை முடித்துவிட்டு பாய் போட்டு படுத்துவிடுவர்.ஒருசிலர் அன்றைய வேலைப்பளு பற்றியும்,அது எப்படி கழிந்தது என்பதையும், ம்றுநாள் செய்யவேண்டிய வேலைகள் பற்றியும்,  மற்ற சிலரோ,வெட்டிக் கதைகள் பேசியும் தூக்கத்தைவரவழைத்துக் கொண்டுவிடுவர்.இரவு ஒன்பது மணி என்பதே நடுச்சாமம் போல தோன்றும்.அப்போதெல்லாம் மின்சாரம் இல்லை.மிகவும் தாமதமாகத்தான் எங்கள் பகுதிகளில் மின்சாரம் எட்டிப் பார்த்தது.
                          தூக்கத்திலிருந்து எழுந்த எனக்கு பயம் கலந்த ஆச்சரியமாகவும்,ஆச்சரியம் கலந்த பயமாகவும் இருந்தது.அருகில் வெள்ளைநிறம் கலந்த செவலைக் குதிரை ஒன்று நின்றுகொண்டிருந்தது.அதன் பக்கத்தில் எங்கள் வீட்டில் வேலை பார்க்கும் சின்னராசு என்பவருடன் எனது உறவினர் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார்.'டேய்,இந்த குதிரையை அந்த கம்பத்தில் கட்டு'அப்பா கூறினார்.எனக்கு உடல் வெலவெலத்துப் போனது.காரணம் தூக்கத்தில் எழுந்தது மட்டுமல்ல ,இருட்டில் குதிரையைப் பார்த்த பயம்.அன்றுதான்  குதிரையை அவ்வளவு அருகில்  பார்க்கிறேன்.வேலைக்காரர் சின்னராசு என் பயத்தை அறிந்து,' பயப்படாதேப்பா,சும்மா பிடிச்சு கட்டு'என்று கயிற்றை என்னிடம் நீட்டினார்.நான் பயத்தில் பின் வாங்கினேன். என் அப்பாவும் உறவினரும் தைரியமூட்டி,என் கையைப் பிடித்து குதிரையின் அருகில் அழைத்து சென்று கயிற்றை என் கையில் கொடுத்து கட்டச் செய்தனர். அந்த நேரத்தில், என் அம்மாவும் அண்ணனும் விழித்தெழுந்து,நடப்பதை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.பிறகு என் அம்மா அரிக்கன் விளக்கை ஏற்றியதும்,குதிரையை அவ்வளவு அருகில், வெளிச்சத்தில் பார்த்த எனக்கு ஆச்சரியத்தில் உடல் முழுதும் புல்லரித்துப் போனது.
                       குதிரை நல்ல அழகு.அதன் மூக்கு, கண், காது அணைத்தையும் அந்த அரை வெள்ச்சத்திலும் நன்றாக உற்றுப் பார்த்தேன்,என்னைக் கவ்வியிருந்த பயத்தைப் பாய்ந்தோடசெய்துவிட்டு,கயிற்றைப் பிடித்துக் குதிரையைக் கம்பத்தில் கட்டினேன்.அப்பொழுது,அப்பா, சின்னராசு,உறவினர்,என் அம்மா மற்றும் அண்ணன் ஆகியோர் 'வீரனாரே' எனக் கையெடுத்துக் கும்பிட்டனர். வீரனார் எங்களின் குல தெய்வம்,எங்கள் கிராமத்தின் காவல் தெய்வம்.நல்ல முறுக்கு மீசையுடன் ஒரு கையில் அரிவாளுடன் சிரித்த முகத்தோடு காட்சியளிப்பவர்.நான் குதிரையை சுற்றி சுற்றி வந்தேன்.முன்னங்கால்,வளைவுடன் கூடிய பின்னங்கால், பின் விலாப் பக்கத்தில் செவலை நிறத் தோலில் வெள்ளை நிற வட்டங்கள்,நீண்ட அடர்த்தியான முடிகள் நிறைந்த ,வழவழப்பான வால் பகுதி ஆகியவற்றைக் கண்ட எனக்கு மனதில் உற்சாகம் பீறிட்டது,என் தூக்கம் போயே போய்விட்டது.நான் குதிரையின் பின்புறம் சென்றதைக் கண்ட சின்னராசு,'தம்பி, பின்னால் போகாதே,குதிரை உதைக்கும்' என்றார்.அப்போதுதான் எனக்கு தெரிந்தது 'குதிரை பின்னால் சென்றால் உதைக்கும்' என்று.இப்போதும் அப்படித்தானே..பிறகு குதிரையை இரண்டு மூன்று முறை சுற்றிவந்து,குதிரையின் அழகை ஆராதித்துவிட்டு,குதிரையின் மேலேறி பார்க்கவேண்டும்  என்றும்,அதன் பிடரி மயிரின் அழகைக் காணவேண்டுமமென்றும் கூறினேன்.முன்பு குதிரையிடம் இருந்த பயம் நீங்கி இப்போது அதை அன்புடம் ஆள வேண்டும் என்ற எண்ணம்  தோன்றியது.சின்னராசுவிடம் என்னை குதிரைமேல் ஏற்றிவிடும்படிக் கெஞ்சினேன்.ஏனெனில் நான் உயரம் குறைந்தவன்தானே?சின்னராசுவும் என்னைக் குதிரைமேல் ஏற்றிவிட்டு,நான் குதிரையின் பிடரியை தொட்டுப்பார்த்ததும் கீழே இறக்கிவிட்டுவிட்டார்.எனக்கோ போர்க்களம் சென்று திரும்பிய போர் வீரன் உணர்வு அப்போது தோன்றியது எனலாம்.
                              பிறகு அம்மா கேட்டார்கள்,'இந்தக் குதிரை சும்மா கிடைத்ததா,இல்லை பணம் கொடுத்து வாங்கியதா? என்று.'பணம் இல்லாமல் பண்டம் கிடைக்குமா?'என்றார் அப்பா.'ஏங்க, நம்ம வயற்காட்டை உழுவதற்கு இரண்டு காளைமாடு வாங்கிவரச்சொன்னா ,நீங்க குதிரை வாங்கிட்டு வந்திருக்கிறீர்களே,இதை வைத்து உழ முடியுமா?'என்று சற்று கோபத்துடன் கேட்ட அம்மா,அவர்களுக்கு சாப்பாடு போட ஆரம்பித்தார்.அப்பா எதுவும் பேசாமல் மற்றவர்களுடன் சேர்ந்து பசியாரத் தொடங்கினார். உறவினர்தான் அம்மாவின் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
                        'அக்கா நாங்க்ள் மாடு வாங்கத்தான் சந்தைக்கு சென்றோம்.அங்கு சில மாடுகளைப் பார்த்து, விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் நல்ல ஜாதி ஜோடியாக ஒன்றைப் பார்த்து அச்சாரம் கொடுத்து வந்துள்ளோம். மீதிப் பணத்தை இன்னும் ஒருவாரத்தில் கொடுத்து மாட்டை ஓட்டிவந்து விடலாம்.வீட்டுக்கு வரும் வழியில்,நமது ஆற்றுப்பாலத்திற்கு அருகில் உள்ள இளங்கோவன்  கடையில் டீ குடிக்கும்போது,அங்கு இந்த குதிரையோடுவந்த சிலரும் டீ குடித்தனர்.ஊருக்குப் புதிதாக இருக்கின்றார்களே என்று நாங்கள் அவ்ர்களை,யார், எவர், எந்த ஊர் என்று கேட்டுக்கொண்டிருந்தோம். அவர்களோ, தங்கள் ஊர் பதினைந்து மைல் தூரம் என்றும்,குதிரை விற்பனைக்கு என்றும்,சந்தைக்கு ஓட்டிச்செல்வதாகவும்,இப்போதிலிருந்து ஓட்டிச்சென்றால் விடிகாலைக்குள் சந்தையை அடைந்துவிடலாம் என்றும் கூறினர்'.குதிரைமீது ஏறிச்செல்லலாமே என்று கேட்டதற்கு, குதிரை மீது  ஏறிச்சென்றால் குதிரைக் களைப்படைந்துவிடுமே' என்று கூறினர்.அதற்குள் அக்கம்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிலர் அருகில் வந்துசேர்ந்தனர்.அவர்களில்  குண்டுவீரனும் ஒருவன்.அவன் உடனே தன்னுடைய வேலையைக்காட்ட ஆரம்பித்தான்.''ஏன்யா,நீங்க இதையெல்லாம் கேட்கினறீர்கள்?குதிரையை நீங்கள் வாங்க போறீங்களா? அப்படியே வாங்க நினைத்தாலும் உங்களிடமெல்லாம் பணம் ஏதைய்யா?. உங்களுக்குத்தான் வேறு வேலை இல்லை,அவர்கள் வேலையை ஏன் கெடுக்கின்றீர்கள்?'' என்று குத்தலாக கேட்டார்.
                                  குண்டுவீரன் நல்ல வாட்டசாட்டமான ஆள்தான்.கொஞ்சம் பக்கவாட்டில் வளர்ந்துவிட்டான். அதனால்தானோ என்னவோ பக்கத்தில் உள்ளவர்களைப் பாடாய் படுத்திவிடுவான்.நல்ல எண்ணமும் கிடையாது. பரம்பரை சொத்திலேயே வாழ்க்கையை அமைத்துக்கொண்டு ,பக்கத்துவீட்டு சொத்துக்களையும் வளைத்துப் போட்டு வாழ்க்கையை அமைத்துக்கொண்டாலும்,நல்ல எண்ணமின்றி நாட்டில் நடமாடும் நயவஞ்சகப் பேய்களில் அவனும் ஒருவன்.பணத்திமிரில் பங்காளிகளையும் உற்றார் உறவினர்களையும் உதறித்தள்ளி வாழ்ந்து வருபவன். "நீரென்றால் கீழ் நோக்கித்தான் செல்லும்,நெருப்பென்றால் மெல் நோக்கித்தான் செல்லும்" ஆனால் வீரனோ பக்கவாட்டில் பஞ்சமின்றி வளர்ந்துவிட்டான்.அதனால்தான் இவனைப் பார்ப்பவர்கள்,'இவன் தலையை மட்டும் துண்டித்துவிட்டால்,வீட்டிற்கு குதுரு தேவையில்லை,பத்து மூட்டை நெல் கொட்டிவைக்கலாம்'எனறு கேலி பேசுவர்.இளைய கூட்டமோ.இன்னும் ஒருபடி மேலே சென்று , 'என்னைய்யா நவீன தசரதரே'என்று பேசி  மகிழ்வர்.ஏனெனில் அவருக்கு மனைவிகளைவிட வைப்பாட்டிகளே அதிகம்.
இருந்தாலும் அவனிடம் கடன் வாங்கும் நேரத்தில் மட்டும் அன்போடு பேசி தங்கள் காரியத்தை சாதித்துக் கொள்வர்.
                           வீரன் பேசுவதைக் கேட்ட மாமா   உடனே  கோபம் கொண்டு,"என்னிடமா பண்ம் இல்லை? நீதான் பணக்காரன் என்ற நினைப்போ ரொம்ப திமிருடா உனக்கு" என்று கூறினார்   எங்களிடம் வீரன் நக்கலாக பேசுவதைக் கூட்டத்தினரும் கவனித்துகொண்டிருந்தனர்.உடனே வீரன்,"எங்கையா உன்னிடம் நூறு ரூபாய் இருந்தால் எடு, உனக்கே இந்தக் குதிரையை வாங்கித் த்ருகிறேன்",என்றார்.மாமாவிடம் நூறு ரூபாய் இருந்தது,ஆனால் உடனே எடுக்கக்கூடாது என்று எண்ணி சிறிது தயக்கம் காட்டி,தன்னிட ம் அதிகமாக இருந்த ஒரு இரண்டு ரூபாயைத் தாளைக் கீழே நைசாக போட்டுவிட்டார்.பிறகு தன்னிடம் இருந்த நூறு ரூபாயை எடுத்து நீட்டினார்.குண்டுவீரன் அசந்து விட்டான்.பிறகு ஒருவழியாக சமாளித்து,"நான் உன்னை சோதனை போடவேண்டும்.உன்னிடம் அதிகமாக இருக்கலாம்" என்று கூறி, பக்கத்தில் நின்ற தன் கைத்தடியை அழைத்து சோதனை செய்யச் சொன்னான்.மாமாவும் அதற்கு ஒத்துக்கொண்டு சோதனை போட அனுமதித்தார்.மடியில் கணம் இருந்தல்தானே.சோதனை முடிவில்  கூடுதலாகவோ, குறைவாகவோ பணம் இல்லை என தெரிந்ததும்,"சரி சரி,பரவாயில்லை.அவர்களது வியாபாரத்தில் நாம் நஷ்டம் ஏற்படுத்தக் கூடாது.எல்லோரும் போங்கையயா,"என்று மழுப்பலாக பேசத் தொடங்கினான்.
                                      உடனே,நமது  மேலத்தெரு வெங்கிடு,வீரனின் கையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு,"வேஷ்டியையெல்லாம் அவிழ்த்து சோதனைப் போட்டுவிட்டு இப்படி நழுவப்பார்க்கிறியே,ஒழுங்கா குதிரையை வாங்கிக் கொடு,இல்லையேல் உனக்கு மானம் என்ற ஒன்று இருந்தால்  அதைக் கப்பலேற்றிவிடுவேன்."என்றான்.""என்னடா மானம் கப்பல் என்று பேசுரே, என்னடா பண்ணமுடியும் உன்னால?" என்று குண்டுவீரனும் பதிலுக்கு முறைத்தான்.உடனே வெங்கிடு,வீரனின் கையை விட்டுவிட்டு,அவன் கழுத்தில் போட்டிருந்த துண்டால்  கழுத்தை இறுக்கிக் கொண்டே , "உன்னுடைய ஆடைகளையெல்லாம் அவிழ்த்துவிட்டு,கரும்புள்ளி செம்புள்ளிக் குத்தி,கழுதைமேல் ஏற்றி,காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணிவரை ஊர்வலம் விடுவோம்"என்றதும், வீரனுக்கு உடல் வெலவெலத்துப் போய்விட்டது.காரணம்,வெங்கிடு, சொன்னதை செய்து காட்டுபவனாயிற்றே.பிறகு வேறுவழியின்றி,குண்டுவீரன் நூறு ரூபாயுடன் தன் பணத்தைப் போட்டு இந்தக் குத்ரையை வாங்கிக் கொடுத்தான்.
                                    இதுதான் எங்கள் வீட்டிற்கு குதிரை வந்த கதை.

                மறுநாள்,காலையிலிருந்தே எங்கள் வீட்டைச் சுற்றி கிராம மக்கள் கூட்டம், கூட்டமாக வரத்தொடங்கிவிட்டனர்.மக்கள் மகிழ்ச்சியில் திளைத்தபோது, என் அப்பா மட்டும் கவலையுடன்,'குதிரையை வாங்கிவிட்டோம்,அதை பராமரிப்பது எப்படி? திருமணங்களுக்கு ஓட்டிச் செல்வது யார்?' என்று யோசிக்கலானார்.அந்த்க் காலங்களில் எங்கள் பகுதிகளில் குதிரையில்தான் மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெறும். குதிரைக்கு ஏற்ற மாதிரி பத்து ரூபாயோ,இறுபது ரூபாயோ சத்தமாக  (வாடைகையாக)கிடைக்கும்.என் அப்பா என்ன செய்தார் தெரியுமா, எங்கள் குதிரைக்கு பத்து ரூபாய்தான் வாடகை என்று நிர்ணயித்து,அதை பராமரிக்கும் பொறுப்பை வேலையாள் சின்னராசுவிடம் ஒப்படைத்துவிட்டார்.மாப்பிள்ளை ஊர்வலத்துக்குப் போய்விட்டு வந்தால், ஒரு ஊர்வலத்துக்கு இரண்டு ரூபாய் கொடுப்பார் சின்னராசுக்கு.
                           இப்படியே  இன்பமாக போய்க்கொண்டிருந்தது குதிரையின் வாழ்க்கை. ஆனால் எனக்குத்தான்,'என்னை ஏன் எழுப்பி குதிரையைக் கட்டச்சொன்னார்கள்'என்று தெரிய்வேயில்லை .பிறகு ஒருநாள் ,அஸ்வனி நட்சத்திரத்தில் பிறந்தால்,குதிரை வாங்கும் அதிர்ஷ்டம் உண்டு என்றும் நான் அஸ்வனியில் பிறந்திருப்பதாகவும் கூறினார்கள்.அஸ்வம் என்றால் குதிரை என்று அர்த்தமாம்.அப்படியென்றால் குதிரை வைத்திருப்பவர்களெல்லாம் அஸ்வனியில் பிறந்தவர்களா என்றால் அப்படியல்ல,அஸ்வனியில் பிறந்தவகள் குதிரை வைத்திருப்பார்கள் என்று கூறுகின்றனர். உண்மையா?.
                                    

கருத்துகள் இல்லை: