தமிழ்த் தெய்வம்

20/10/11

கட்டுரை

                                               

                                                                    திருமணம்

        "திருமணம்" ஆயிரங்காலத்துப் பயிர்.இது காலங்காலமாக இருந்துவரும் முதுமொழி.ஆனால் இன்று, இது ஆயிரங்களின் பயிர். பிள்ளைகளின் வாழ்க்கையை ஆயிரங்கள் சிலவற்றில் அடக்கிவிடுகின்றனர்.
          இப்பொழுதெல்லாம் பிள்ளைகள் நிறைய படிக்கின்றனர்.நல்ல வேளையிலும் அமர்ந்து விடுகின்றனர்.பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுடன்  மன நிறைவோடு மகிழ்ச்சி பொங்க வாழ்கின்றனர்.ஆனால் திருமணம் என்ற பேச்சு வரும்போது மட்டும் பெற்றோர்கள் பெருமை பேச ஆரம்பித்துவிடுகின்றனர்.அதுவும் சில பெற்றோர்கள் பேசுவது பெரும் பிரச்சினையையே உருவாக்கிவிடும் என்ற அச்சம் எழுகின்றது. மேலும் பெண்கள் ஆண்களைவிட அதிகம் படிக்கின்றனர்.நன்கு படிக்கின்றனர்.நல்ல வேலையிலும் அமர்ந்துவிடுகின்றனர்.ஆனால் திருமணம் என்று வரும்போது தங்களுக்கேற்றவாறு பையன் கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்,பெண்களும்,பெற்றோர்களும்.
               பெண்கள் படிக்க வேண்டும்,பெரிய படிப்பு  படிக்க வேண்டும்.நல்ல வேலையில் அமர்ந்து நல்ல சம்பளமும் வாங்கவேண்டும்.ஆனால் திருமணம் என்ற நிலைப்பாடு வரும்போது மட்டும் பெண்களைப் பெற்றோர் பெரும் வேதனைப் படுகின்றனர்.உதாரணமாக,பெண், பி.ஈ  எம் .எஸ் படித்திருக்கின்றார் என்றால் அதைவிட உயர்ந்தவராக மாப்பிள்ளை இருக்க வேண்டும் என பல  பெற்றோர்கள்  நினைக்கின்றனர்.இந்த மாதிரியான நினைப்புதான் பல பெண்களின் வாழ்க்கை த்ள்ளிப்போக காரணமாகின்றது.பெண்ணிண் படிப்புக்கு ஏற்ற படிப்பும், பண்பாடும் ,இருந்தால் உடன் மணம் முடித்துவிட வேண்டும்.இதை விடுத்து, " என் பெண் இவ்வளவு படித்து, இவ்வளவு சம்பளம் வாங்குகின்றாள் ,பையனுக்கு அதைவிட அதிக படிப்பும், சம்பளமும் இருக்கவேண்டும்" என பேசினால்,பெண்ணுக்கு எப்படி திருமணம் நடக்கும்? பையனின் பெற்றோர்களும் "என் பையன் இவ்வளவு படித்திருக்கின்றான்,இவ்வளவு சம்பளம் வாங்குகின்றான்,எங்களுக்கு ஒரே பையன்"என்றெல்லாம் பெருமை பேசி,ஒருசில விருப்பு, வெறுப்புகளையும் கொண்டிருப்பதால்தான், இக்காலத்து திருமணங்கள்,ஆயிரங்காலத்துப் பயிராக இல்லாமல் சில நாள் பயிராக வாடி வ்தங்கிப் போய் விடுகின்றது.
                               இப்படியெல்லாம் இல்லாமல்,தங்கள் பையன் ,தங்கள் பெண் ,தங்கள் குழந்தைகளின் வாழ்க்கை என்பதை மட்டும் மனதில் இருத்தி,கடந்த காலத்தில் நாம் எப்படி இருந்தோம்?, இப்பொழுது எப்படி இருக்கின்றோம்? எதிர் காலத்தில்   நமது பிள்ளைகள் வாழ்வு எப்படி இருக்க வேண்டும்? என்பதை மட்டும் மனதில் கொண்டு  நமது செயல் பாடுகள் அமைய வேண்டுமே தவிர, .எந்தக் காரணத்தைக்கொண்டும் தங்களது விருப்பு வெறுப்புகளை தங்களது பிள்ளைகளின் வாழ்க்கை மீது தினிக்காமல்  திருமணத்தை பேசி முடித்து,அவர்களுக்கு வெற்றிகரமான வாழ்க்கை அமைய பாடுபட வேண்டும்.
                              அடுத்து, சில பெற்றோர்கள் ஜாதகத்தை நம்பியே தங்களது செல்லக் குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்து விடுகின்றனர்.ஜாதகத்தை நம்புவோர், ஓரளவுதான் அதை நம்ப வேண்டுமே தவிர,அதில் உள்ள எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து கொண்டிருக்கக்கூடாது.எல்லா ஜாதகத்திலும் நல்லதும் கெட்டதும் கலந்துதான் இருக்கும்.குறிப்பாக தோஷமில்லாத ஜாதகமே இருக்காது.செவ்வாய் தோஷத்தை மட்டும் வேண்டுமானால் திருமணத்திற்காக பார்க்கலாமே தவிர,வேறு எந்த தோஷத்தையும் பார்க்கக்கூடாது.ஆதலால்,ஜாதகத்தை நம்புவோர் செவ்வாய் தோஷத்தை மட்டும் பாருங்கள், மற்ற எந்த தோஷம் இருந்தாலும் அதற்கும் திருமணத்திற்கும் தொடர்பில்லை.ஆதலால் செவ்வாய் தோஷம் பாருங்கள் ,பொருத்தம் பாருங்கள், நல்ல முறையில் பேச்சு வார்த்தையை முடித்து திருமண்த்தை நடத்தும் வழியைப் பாருங்கள்
                     "பிள்ளைகளின் ஜாதகத்தைப் பார்ப்பதைவிட,பெற்றோர்களின் ஜாதகத்தை முதலில் பார்த்து,சம்பந்திகளுக்குள் பொருத்தம் இருந்தால், பிறகு பேசலாம்" என்று வேடிக்கையாக சொல்வ்துண்டு..இம்மாதிரியான இக்கட்டான நிலைமைகளையெல்லாம் ஏற்படுத்தாமல் , ஜாதகம் பார்ப்போர் பாருங்கள்,ஜாதகத்தை நம்பாதோர்,தங்கள் பிள்ளைகளை நம்புங்கள்.எல்லாவற்றுக்கும் மேலாக பெண்ணையும், பிள்ளையையும் நேரில் பார்த்து பேச வாய்ப்பளியுங்கள்.முதலில் அவர்கள் தங்களைப் புரிந்துகொள்ளட்டும்,பிறகு தொடருங்கள் உங்கள் பேச்சுக்களை.
       ஆதலால்,பிள்ளைகளே,பெற்றோர்களுக்கு மரியாதை கொடுங்கள், ம்திப்பளியுங்கள்,ஆனால் உங்கள் வாழ்க்கைப் பாதையை  நீங்களே நிர்ணயித்துக்கொள்ளுங்கள்.பெற்றோர்களே,நீங்களும் உங்கள் பிள்ளைகளின் எதிகாலத்தை நன்றாக கவனத்தில் கொண்டு, நல்ல முடிவினை எடுங்கள்.வீண் வார்த்தை, விதண்டாவாதம் பேசி, எதிகால சந்ததியினரை ஏமாற்றத்துக்கு ஆளாக்காமல், அவர்கள் வாழ்வில் வளம் பெற ,வாழ்வில் ஏற்றம்பெற, வாழ்வில் ஒளீயேற்ற முயற்சியுங்கள்.
                 எல்லா பெற்றோர்களும்,தங்கள் பிள்ளைகளின் வாழ்வை வளமாக்கத்தான் விரும்புவர். ஆனால், வளமான வாழ்வு வாழ, முதலில் தங்கள் பிள்ளைகளின் மனதை ஆராய்ந்து,தங்களின் நிலையையும் நன்குணர்ந்து,பிறகு மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து,மண வாழ்க்கையை, மணமுள்ள வாழ்க்கையாக மாற்ற முணைவோம்.விரைவில் எல்லோரது இல்லங்களிலும் மகிழ்ச்சியான மணவிழா காண வாழ்த்துக்கள்.

                    இது ஒரு மீள் பதிவு.

     இராசராசன் செய்தி மலரில்  மே 2007-ல் வேளிவந்தது.